Monday, October 17, 2016

தீக்‌ஷா தினக் குறிப்புகள்.


தீக்‌ஷா தின குறிப்புகள் -1

இந்துவாக சாகமாட்டேன் என்றது வெறும் சபதமல்ல இலட்சியம்!

 1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில் “நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்” என்று அண்ணல் அறிவித்தார். அந்த பேச்சு வெறும் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறினார் காந்தி. மாநாட்டுக்கும் முன்னதாக, இயாலோ நகராட்சி மன்றம் அண்ணலுக்கு வரவேற்புப் பட்டயம் வழங்கி கவுரவித்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் உரையில், “நெடுங்காலமாக தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்களை குறித்த அவர்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லையென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்துகொள்ளப் போவதுமில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, சுய உதவி, சுயமேம்பாட்டுக்கான போராட்டம் இவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவெடுத்துள்ளோம்” என்று பேசினார் அண்ணல். ஆக, அண்ணல் இந்துவாக சாகமாட்டேன் என்கிற அறிவுப்பு காந்தி சொன்னதைப்போல் வெறும் கோபச்சொல் அல்ல. தீர்க்கமான இலக்கை நோக்கிய துவக்கம். ஆனாலும் அப்போது அண்ணல் இந்துமதத்திலிருந்து வெளியேறி எந்த மதத்தில் இணைவது என்கிற முடிவை எடுக்கவில்லை. இயாலோ மாநாட்டு உரைக்கு காந்தி தெரிவித்திருந்த எதிர்வினைக்கு அண்ணல் (அக்டோபர் 15-1935) அளித்த பதிலில், “நாங்கள் எந்த மதத்தில் இணையப்போகிறோம் என்று என்பது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை;எந்தெந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பதையும் முடிவு செய்யவில்லை;ஆனால், நாங்கள் தீர்க்கமாய் கலந்து ஆலோசித்து உறுதியாக முடிவு செய்திருப்பது ஒன்றுதான்; அதாவது இந்து மதத்தால் எங்களுக்கு நலன் எதுவும் கிடையாது” என்று கூறினார்.
1907 இல் அண்ணல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சியடைந்ததை முன்னிட்டு அவருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் ஆசிரியர் கெலுஸ்கர் வழங்கிய ‘கௌதம புத்தர் வரலாறு’ நூலின் மூலம் புத்தரை அறிந்த அண்ணல் 1930 களுக்குப் பிறகு தலித்துகளின் தீண்டப்படாத நிலைக்குறித்த ஆய்வுகளை ஆழமாக செய்தபோதுதான் பௌத்தமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்ததையும் பௌத்தர்களே தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதையும் கண்டறிந்தார். இதே ஆய்வு முடிவை முன்னவே கண்டடைந்த பண்டிதர் அயோத்தி தாசர் வழியில் அண்ணல் பௌத்தம் நோக்கி பயணிக்கத்துவங்கினார். பண்டிதர் மற்றும் அவரது சகாக்களால் களப்பணியாற்றப்பட்ட சென்னை, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பௌத்த மறுமலர்ச்சி இடங்களுக்கு சென்று வரலாற்றாய்வு செய்தார் அண்ணல். முடிவாக பௌத்தத்தின் உன்னத நிலையான ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் பண்பாட்டுத் தத்துவத்தை இலட்சியமாகக் கொண்டு பௌத்தம் தழுவும் முடிவுக்கு வந்தார். இதற்கிடையில் சுமார் 15 ஆண்டுகள் அண்ணல் மதங்களைக்குறித்தும் மதங்களின் எதிர்காலம் குறித்தும் விரிவாக அலசி ஆராய்ந்திருந்தார். கடும் ஆய்வுக்கும் சிந்தனைக்கும் பிறகே அவர் பௌத்தம் ஏற்றார். இவ்வாறு,  இந்துவாக சாகமாட்டேன் என்று கூறியதை வெறும் சபதாமாக இல்லாமல், அதை இலட்சியமாக ஆக்கி, அதன் மூலம் ஒரு சமூகத்தின் எதிர்கால நலனை எடுத்துக்காட்டிச் சென்றிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.







தீக்‌ஷா தின குறிப்புகள் -2

மதமாற்றத்திற்கான இடமும் தேதியும் தேர்வானதன் பின்னணிகள்-1

இந்துவாக இறக்கப்போவதில்லை என்று 1935 இல் அண்ணல் அறிவித்த பிறகு அனைத்து மதத்தினரும் அவரைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அவருடைய வரலாற்று அறிவும், சமூக விடுதலை உணர்வும் அவரை பௌத்தம் நோக்கி அழைத்து வந்தன. 1950 களின் துவக்கத்திலேயே அண்ணல் பௌத்தம் தழுவப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துக்கொண்டிருந்தது. அதற்கும் முன்னவே அவர் தம்மை பௌத்த சிந்தனையாளராக செயல்படுத்திக்கொண்டிருந்தார். அவரது பேச்சு,செயல் என சகலத்திலும் பௌத்தமே வெளிப்பட்டது. 1945 இல் அவர் துவங்கிய மக்கள் கல்வி இயக்கத்தின் சார்பாக சித்தார்த்தா கல்லூரியை துவக்கினார். 1950 இல் டெல்லியில் பௌத்தப்பேரணியை நடத்தினார். அதே ஆண்டு மே மாதம் 25 ஆம்தேதி இலங்கை கண்டியில் புத்தரின் பல் இருக்கும் விஹாரையில் நடைப்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் ‘பௌத்தம் மதத்தின் தோற்றமும் வீழ்ச்சியும்’ பற்றி உரையாற்றினார். 1854 இல் இந்திய பௌத்த சங்கத்தை நிறுவினார். அதே ஆண்டில் பர்மாவில் நடைப்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் பங்கேற்றார். இப்படி அவரின் 1950 கள் காலக்கட்டம் பௌத்தத்தைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்ததால் அவரது பௌத்த ஏற்பு நிகழ்வும் அது எப்போது, எங்கே நடக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் மக்களிடம் உருவாக்கியது. இந்நிலையில் அண்ணல் 1954 ஆண்டில், தமது பௌத்தம் ஏற்பு நிகழ்வு மும்பையில் நடைபெறலாம் என்று அறிவித்தார். ஆனால், மும்பையில் மதமாற்றம் நிகழாமல் நாக்பூரில் நடைபெற்றது.
ஏனெனில்……


தீக்‌ஷா தின குறிப்புகள் -3

மதமாற்றத்திற்கான இடமும் தேதியும் தேர்வானதன் பின்னணிகள்-2

அண்ணல் மும்பையில் மதமாற்ற நிகழ்வு நடக்க வாய்பிருப்பதாக கூறியதைத்தொடர்ந்து இடத்தேர்வு குறித்த விவாதம் எழுந்தது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வொன்று நிகழும் இடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இருந்தால் நல்லது என்கிற வாதம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. நாக்பூர் பகுதியிலிருந்து அண்ணலுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை எழுதியவர் வாமன் ராவ் காட்போல் என்கிற பௌத்த ஆய்வாளரும் அண்ணலின் சீர்மிகு தளபதியுமாவார். அக்கடிதத்தில் ‘பம்பாய்க்கு பௌத்த வரலாற்றில் முக்கிய இடமில்லை’ என்றும் ‘நாக்பூரே சிறந்த தேர்வாக இருக்கமுடியும்’ என்றும் கூறி, இடம் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் ‘இதுவரை தேதியை தேர்வு செய்யாமலிருந்தால் அக்டோபர் 14 ஐ தேர்வு செய்யுங்கள்’ என்றும் அக்கடிதத்தில் கோரியிருந்தார் வாமன்ராவ். அக்டோபர் 14 ஆம் தேதியை வாமன்ராவ் குறிப்பிட்டுக்கூறியதற்கு முக்கியக்காரணமும் இருந்தது. பகவான் புத்தர் உயிர் துறந்து மகாபரிநிப்பாணம் அடைந்த காலத்தைக் கணக்கிட்டு அந்த தேதியைக் குறிப்பிட்டார் வாமன்ராவ். இதற்கு ஆதாரமாக அவர் எடுத்துக்காட்டிய நூல் ஈ.ஜே.தாமஸ் எழுதிய ‘புத்தரின் வாழ்க்கை’ என்னும் நூலாகும். இந்நூலில் புத்தர் பரிநிப்பாணம் அடைந்த போது அவரது உடல் மீது பூக்கள் பொழிந்ததைப்பற்றி முக்கியக் குறிப்பு இருந்தது. அதன்படி, புத்தரின் உடல் மீது பொழிந்த பூக்கள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிதான் பூக்கும். அவற்றையெல்லாம் கணித்த ஈ.ஜே.தாமஸ் புத்தரின் பரிநிப்பாணம் அக்டோபர் 13 ஆம் நாள்தான் நடைப்பெற்றது என்று அந்நூலில் கூறினார். எனவே புத்தரின் பரிநிப்பாண நாளுக்கும் மறுநாள் அக்டோபர் 14 ஐ முன்னிறுத்தினார் வாமன்ராவ். அதாவது பரிநிப்பாணத்திற்கு பிறகு நிகழும் மறுமலர்ச்சியை இந்த தேதி குறிக்கிறது எனலாம். சாம்ராட் அசோகரும் இதே தேதியில்தான் பௌத்தம் தழுவினார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வாமன்ராவ் அவர்களின் கடிதத்திற்கு பிறகு, அண்ணல் நாக்பூரையும் அக்டோபர் 14 ஆம் தேதியையும் தேர்வு செய்தார். நாக்பூரை தேர்வு செய்தவுடன் திட்டமிட்டே ஒரு பதற்றநிலை உருவாக்கப்பட்டது. ஏனெனில் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் இருந்தது. எனவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் மோதலை உருவாக்குவதற்காகவே அண்ணல் அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஒரு நச்சுக்கருத்து பரப்பப்பட்டது. இதனால் பதற்றமும் உருவானது. பௌத்த ஏற்பு உரையில், ‘பௌத்ததை வளர்த்தெடுத்த நாக மக்கள் செழித்து வாழ்ந்த நிலம் நாகபுரி. நாங்கள் நாக வம்சத்தினர். எனவேதான் நாகபுரியை தேர்வு செய்தோமே தவிர, ஆர்.எஸ்.எஸ்.எல்லாம் எங்கள் மனதில் துளியிடத்திலும் இல்லை’ என்று பதிலளித்து விளக்கினார்.


தீக்‌ஷா தின குறிப்புகள் -4

தேர்வான நாக்பூர் இடம் குறித்த குழப்பமும் விபத்தில் உயிர் தப்பிய அண்ணலின் தீர்க்கமும்-1

நாக்பூரில் அக்டோபர் 14 ஆம் தேதியில் தீட்சை நாளை வைத்துக்கொள்ள அண்ணல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வாமன் ராவ் தலைமையிலான குழுவினர் விழா ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கினார்கள். நாக்பூர் கோத்தாரி மாளிகையில் ஒரு அறை அலுவலகமாக செயல்பட வாடகைக்கு எடுக்கப்பட்டது. வாமன்ராவ் அந்த அலுவலகத்திலிருந்து செயல்பாட்டாளர்களை இயக்கினார். நாக்பூர் பர்திப்பகுதி இளைஞர்கள் வாமன்ராவின் தீவிர செயல்பாட்டாளர்களாக ஓடி ஓடி உழைத்தனர். விழா நடக்கப்போகும் இடம் விசாலமாக இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டு தேடிய குழுவினர் ஷிராதாந்த்பேத்தில் இருந்த அம்மை தடுப்பு ஆராய்ச்சி நிலையத்திற்கருகிலிருந்த நிலப்பரப்பை ஏற்பாடு செய்தனர். அன்றிலிருந்தே அது தீக்‌ஷா பூமி என்று அழைக்கப்பட்டது. விழாவுக்கான பணிகள் இப்படி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில் வாமன்ராவ் அவர்களுக்கு ரேவ்ராம்காவ்தே ஒரு தந்தியை அனுப்பியிருந்தார். ‘விழா ஏற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்றும் உடனடியாக பாபாசாகேப்பை வாமன்ராவ் சந்திக்கவேண்டுமென்றும்’ அந்த தந்தியில் இருந்தது. ‘பணிகள் எதுவும் தடைப்படவேண்டாம், தொடருட்டும்’ என்று செயல்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வாமன்ராவ் அண்ணலை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லிக்கு சென்ற வாமன்ராவ் தனக்கு தந்தி அனுப்பிய ரேவ்காவ்தேவை சந்தித்து ‘ஏன் விழா ஏற்பாடுகளை நிறுத்தவேண்டும்?’ என்று வினவினார். “பாபு அரிதாஸ் ஆவ்லே மற்றும் அக்கந்த் மேதே ஆகியோர் வேறு இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறினார் காவ்தேவ். பிறகு அண்ணலிடம் சென்றார் வாமன்ராவ். அங்கு அண்ணலுடன் பாபு அரிதாஸும் இருந்தார். அவரிடம் “ஏன் நாங்கள் தேர்வு செய்த இடத்தில் விழாக் கூடாது?’’ என்ற கேள்வியை முன்வைத்தார். “முதல் காரணம், விழா நடக்கவுள்ள இடத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வசித்து வருகிறார்கள். இரண்டாவது காரணம் நீங்கள் விழாவுக்காக நடத்திய பூஜை பவானிசங்கர் நியோகி என்னும் பார்ப்பனரால் நடத்தப்பட்டிருக்கிறது” என்று பாபு அரிதாஸ் ஆவ்லே வாமன்ராவிடம் காரணங்களைக் கூறினார். அண்ணல் அனைத்தையும் கேட்டபடி இருந்தார். மேலும், பார்ப்பனரால் பூஜை செய்யப்பட்டதா? என்று அதிர்ச்சியுமடைந்தார். அரிதாஸ் ஆவ்லேவுக்கும் அண்ணலுக்கும் பூஜையில் நடந்த விஷயத்தை இவ்வாறு விளக்கினார் வாமன்ராவ்: “தீக்‌ஷா பூமியில் நாங்கள் பூஜை நடத்தியது உண்மைதான். ஆனால், ஒரு பௌத்த மதத்தினரால்தான் அந்த பூஜை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஷிராமனீர் பதவியேற்றிருந்த லக்‌ஷ்மன் காவ்தே அவர்கள்தான் பூஜையை நடத்திய பௌத்தர். அவ்வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பார்ப்பனரான நியோகி பூஜை நடப்படைக் கண்டு ஆர்வத்தில் நின்றுகொண்டு கலந்துகொண்டார். அவர் கைகளால் எந்த பூஜையும் நடத்தப்படவில்லை”.
மேலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் ஆபத்து வரவாய்ப்பில்லை. பாப்சாகேப்பின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் முழுத்தயாரிப்பில் இருக்கிறோம் என்றார் வாமன்ராவ். உடனே குறுக்கிட்ட அண்ணல் “என் உயிரைப்பற்றியக் கவலை எனக்கில்லை” என்று கூறிவிட்டு, முடிவை பிறகு சொல்கிறேன், காத்திருங்கள் என்று கூறினார். அன்று பருவமழையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. அந்நிலையில் மாலைநேரத்தில் அண்ணல் தமது துணைவியாருடன் காரில் புறப்பட்டு பயணமானார். கடுமழையால் ஓட்டுநருக்கு தடுமாற்றம் ஏற்பட, தமது கட்டுப்பாட்டை இழந்தார். தறிக்கெட்டு ஓடிய அண்ணலின் கார் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மின்கம்பத்தில்  மோதியது.



தீக்‌ஷா தின குறிப்புகள் -5

தேர்வான நாக்பூர் இடம் குறித்த குழப்பமும் விபத்தில் உயிர் தப்பிய அண்ணலின் தீர்க்கமும்-2.

அண்ணலின் கார் தறிக்கெட்டு ஓடி மின்கம்பத்தில் கடுமையாக மோதியது. அண்ணல் தூக்கியெறியபடும் நிலைக்கு தள்ளப்பட, சரியான நேரத்தில் அண்ணலின் துணைவியார் மாய்சாகேப் அவரைத்தாங்கிக்கொண்டார். நொடிப்பொழுதில் உயிர்தப்பிய அண்ணல் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அவரின் உயிர் போய்விடும் என்கிற அதிர்ச்சியோ அச்சமோ அவருக்கு இல்லை. உயிரைப்பற்றிய கவலை அவருக்கு எப்போதுமே இல்லை. அவருக்கு கவலையெல்லாம் தானொரு இந்துவாகவே சாக நேரிடுமோ என்பதுதான். இந்த விபத்தில் அண்ணல் தன்னை மரணம் பின் தொடர்வதை உணர்ந்திருக்கவேண்டும். எனவே, இனியும் பௌத்த ஏற்பை தள்ளிப்போடவோ, வரும் இடையூறுகளுக்கு இடம்கொடுக்கவோ அவர் விரும்பவில்லை. விபத்திலிருந்து மீண்ட அண்ணல் நேராக வீடு வந்து அங்கு தங்கியிருந்த வாமன்ராவை உடனடியாக அழைத்தார். வாமன்ராவும் அண்ணலின் முன் வந்து நின்றார். “நீங்கள் உடனே நாக்பூர் செல்லுங்கள். ஏற்கனவே ஏற்பாடு நடந்துகொண்டிருக்கும் இடத்திலேயே மதமாற்ற விழா நடக்கும். இனி என் உயிரைப்பற்றியக் கவலை எனக்கில்லை” என்று வாமன்ராவிடம் கூறியதைத்தொடர்ந்து நாக்பூருக்கு திரும்பி வேலைகளை துரிதப்படுத்தினார் வாமன்ராவ்.

தீக்‌ஷா தின குறிப்புகள்- 6
அண்ணலும் இலட்சக்கணக்கான மக்களும் புத்தம் ஏற்ற வரலாற்று நிகழ்வு.

வாமன்ராவிடம் தீர்க்கமாக இடத்தை மாற்றவேண்டாம் என்று அண்ணல் கூறியவுடன், நாக்பூர் வந்தடைந்த வாமன்ராவ் பெரும் இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு வேலைகளை முடுக்கினார். விழா நடக்கவிருந்த பெரும் மைதானத்தில் புதர்கள் மண்டிக்கிடந்தது. விழா நடக்க ஓரிரு நாட்களே இருந்த நிலையில், மகர்புரா,தரம்பேத்,கர்னல் பூங்கா உள்ளிட்ட சேரிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் இரவில் பெட்ரோமாஸ் விளக்குகளின் வெளிச்சத்தில் தூய்மைப்படுத்தினர். இரவென்றும் பாராமல் கற்களையும் முட்களையும் அப்புறப்படுத்திய இளைஞர்களுடன் வாமன்ராவ், வசந்த் மூன், பிரகலாத் மேதே உள்ளிட்டவர்களும் பங்கேற்று பணிசெய்தனர்.
அக்டோபர் 11 ஆம்தேதி டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் வந்து சேர்ந்தார் அண்ணல். பர்தியில் வலுவான சேரியாக இருந்த மகர்புராவின் முன்னால் இருந்த விடுதியில் அண்ணல் தங்கினார். கர்னல் பூங்கா பகுதி சமத்துவ தொண்டர் படையினர் வெள்ளுடை அணிந்து காவல் பணியாற்றினர். மகர்புரா மக்களும் அண்ணலுக்கு பாதுகாப்பாக கண்காணித்துக்கொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம் விழா நடக்கவிருந்த மைதானம் சிறப்பாக தயாராகிக்கொண்டிருந்தது. மைதானத்தை, சுத்தப்படுத்தி, சமதளமாக்கி, குடிநீர்,கழிவறை வசதிகளை நகராட்சியின் சார்பாக உதவி மேயர் சாதாநந்த் புல்ஜிலே செய்துக்கொடுத்தார்.
மைதானம் தொண்டர் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. வாயில் அருகில் கடைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேடையும் தீவிரமாக தொண்டர் படையால் கண்காணிக்கப்பட்டது. விழா மேடை 30*50 என்ற அளவில் அமைக்கப்பட்டது. மேடையின் முன்புறம் சுமார் 50 அடிதூரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. பாதுகாப்பு வேலியில்ருந்து மேலும் 20 அடி தூரம் இடைவெளி விடப்பட்டு, அதற்கு அடுத்ததாகவே மக்கள் உட்கார இடம் ஒதுக்கப்பட்டது. துப்பாக்கி சுடும் தூரத்தைக் கணக்கிட்டு இந்த தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. வலதில் ஆண்களுக்கும் இடதில் பெண்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது. விடுதில் அண்ணலுக்கு பாதுகாப்பளித்த கர்னல் பகுதி தொண்டர்படையே விழா மேடைப்பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டது.

தம்ம தீட்சை விழா அன்று சுமார் 5 இலட்சம் மக்கள் பங்கேற்றனர். காலை 90.30 மணிக்கு பிக்கு சந்திரமணியுடன் அண்ணல் மேடைக்கு வந்துசேர்ந்தார். இவ்விழாவில் பிக்குகள் தெரோ பன்னாட்டிஸ்(போபால்), எச்.சித்தாதிஸ்ஸ(இலங்கை), எம்.சௌகரத்னா(காசி), ஜி.பிரித்னியானந்த்(இலட்சமணபுரி), நெர் ஷிரம்னெர்(மே.வங்கம்), அருட்டிரு பரம்சாந்தி உள்ளிட்ட பிக்குகள் பங்கேற்றனர்.
வணக்கத்திற்குரிய பிக்கு மகாஸ்தவீர் சந்திரமணி அவர்கள் திரிசரணங்களையும் பஞ்சசீலங்களையும் போதித்து அண்ணலுக்கும் அண்ணலின் துணைவியாருக்கும் தீட்சையளித்து புத்த மதத்தில் இணைத்தார். பாபாசாகேப்பும் துணைவியாரும் புத்தரின் சிலையின் முன் மும்முறை வணங்கி புத்தம் சரணடைந்தனர். அங்கே கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் பௌத்தம் ஏற்று மும்மணிகளை முழங்கினார்கள். அண்ணல் 22 சூளுரைகள் முழங்கினார். கூட்டமும் அவற்றை திருப்பி முழங்கியது. அந்த 22 உறுதி மொழிகளையும் அண்ணல் தன் கைப்படவே பெரிய எழுத்தில் தனித்தனி 22 தாள்களில் எழுதியிருந்தார். கண்ணாடி அணியாமல் படிக்கவே இப்படி செய்திருந்தார். ஏனெனில் ‘எந்த வண்ணக்கண்ணாடியும் போடாமலே-எந்தவொரு முன்கருதுகோளும் இல்லாமலே-தம்ம தீக்‌ஷையை அவர் எடுத்துக்கொள்ள நினைதிருக்கலாம் என்கிறார் விழா செயல்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த் மூன்.


தீக்‌ஷா தின குறிப்புகள் -7

கிடைக்காமல் போன வரலாற்றுச் சின்னம்.

அண்ணல் தீக்‌ஷா விழாவினை நிகழ்த்திய விழாக்குவினரில் ஒருவராக விளங்கினார் தளபதி வசந்த் மூன். விழா மேடைகளைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. விழா துவங்கும் சமயத்தில்தான் அவர் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் கவனித்தார். அண்ணல் வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த அந்த சமயத்தில் அண்ணலுக்கு போடப்பட்டிருந்த இரும்பு மடக்கு நாற்காலி அவ்வளவு சரியாகப்படவில்லை. ரேவாரம் காவ்தே அவர்களிடம் இதுக்குறித்து வசந்த் மூன் அவர்கள் கேட்டபோது, ‘நகராட்சி லாரியில் பெரிய நாற்காலிகள் வந்துகொண்டிருக்கின்றன’ என்று காவ்தே அவர்கள் கூறினார். ஆனாலும் அண்ணல் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்பதை உணர்ந்த வசந்த் மூன் அவர்கள் மைதானத்துக்கு வெளியே ஓடிவந்தார். மைதானத்தில் வெளிப்பகுதியில் இருந்த முக்கிய சாலையோரத்தில் ஒரு வீட்டில் ஒருவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை வசந்த் மூன் கண்டார். அவரிடம் சென்று வசந்த் மூன் விஷயத்தை விளக்கினார். அந்த வீட்டுக்காரர் இஸ்லாமியராக இருக்கலாம் என்கிறார் வசந்த் மூன். அண்ணலுக்கு நாற்காலி வேண்டுமென்று கேட்டவுடன் ‘மகிழ்ச்சியுடன் எடுத்து செல்லுங்கள்’ என்று சொல்லி நாற்காலியைக் கொடுத்தார் நாற்காலியின் உரிமையாளர். கனமாக இருந்த பழைய மர நாற்காலிகளை தூக்கிக்கொண்டு வசந்த் மூனும் அவரது சகாக்களும் மேடைக்கு விரைந்தனர். மேடையில் நாற்காலியை வைத்துக்கொண்டிருக்கும் போது ‘அம்பேத்கர் வாழ்க’ என்ற முழக்கங்களுக்கிடையே மேடையேறினார் அண்ணல். பிறகு, வசந்த் மூன் கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர்ந்தார். விழா முடிந்த பிறகு, நாற்காலியின் உரிமையாளரிடம் சொல்லியபடி நாற்காலிகள் ஒப்படைக்கப்பட்டன.
விழா முடிந்து சிலமாதங்கள் கழித்து வசந்த மூன் விழா நடந்த மைதானத்திற்கு சென்றார். விழாவின் போது நிகழ்ந்த நிகழ்வுகள் அவரது மனதில் தோன்றின. மக்கள் வெள்ளம் கண்முன்னே வந்து போனது. அப்படியே அந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் அண்ணல் அமர்ந்திருந்த அந்த நாற்காலியும் நினைவில் வர, அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி அந்த நாற்காலியை எப்படியும் வாங்கிவிடவேண்டுமென்று அந்த நாற்காலியை பெற்ற வீட்டிற்கு விரைந்தார் வசந்த மூன். ‘இங்கே வசித்தவர்கள் மத்திய பிரதேசம் சென்றுவிட்டார்கள்’ என்கிற பதில்தான் அவருக்கு கிடைத்தது. “அவர்களின் முகவரியாவது கிடைக்குமா?” என்று விசாரித்தபோது “தெரியாது” என்கிற பதிலே வந்தது.
அது வெறும் நாற்காலியல்ல. ஒரு சமூகம் கொடும் நிலையிலிருந்து சீர்நிலைக்கு செல்லுவதற்கிடையில் சற்று இளைப்பாறிய தடம் அது.

தீக்‌ஷா தின குறிப்புகளுக்காக உதவிய நூல்கள்:
1.ஒரு தலித்திடமிருந்து-வசந்த் மூன். விடியல் பதிப்பகம்.
2.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல்தொகுப்பு 37, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்.

(2016 அக்டோபர் தீக்‌ஷா தினத்திற்காக முகநூலில் எழுதப்பட்ட குறிப்புகள் இவை.)

Friday, April 22, 2016

புத்தகத்தோடு வாழ்தல் இனிது

தி.ஸ்டாலின்.


"மனிதனைப் போலத்தான் புத்தக மும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போல அது வெறும் பொருள் மட்டும் அல்ல”  
-மாக்ஸிம் கார்க்கி.




ஒரு முறை சகோதரர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். எடுத்தவுடன் 'அண்ணா மார்க்ஸியம்னா என்னனு ஒரு ரெண்டு நிமிஷத்துல சொல்லுங்கண்ணா. அவசரம்' என்றார். நான் யோசிப்பதற்குள் 'ஓகேண்ணா அப்புறம் பேசுறேன்' என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். சில மணிநேரம் கழித்து அவரே மீண்டும் அழைத்து, 'ஒன்னுமில்லைண்ணா. ஒரு கம்யூனிஸ்ட் காரர்கிட்ட சின்ன ஆர்க்யூமென்ட். அதான் கேட்டேன்' என்றார். அந்த தோழரை சமாளிக்க இவருக்கு மார்க்சியம் குறித்த தகவல்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதனால்தான் இரண்டே நிமிடத்தில் சொல்லும்படி என்னைக் கேட்டிருக்கிறார். இரண்டு நிமிட சமையல் விளம்பரத்தில் வருவதைப்போல் 'இன்ஸ்டன்ட்' விஷயமாக மார்க்ஸியத்தை கேட்டால் என்ன செய்யமுடியும். நானும் விரிவான மார்க்ஸிய வாசகனல்லதான். அதன் சில அடிப்படைகளை வாசித்திருக்கிறேன். அவற்றை அறிமுகமாக்கிக்கொள்ளவே நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. படிப்பதென்றால் வெறுமனே வாசிப்பல்ல. அவற்றை புரிந்துகொள்ளவும் வேண்டியது. அதற்கு வெறும் வாசிப்பு மட்டுமல்ல உரையாடலும் தேவை. இயக்கவியல், பொருள்முதல்வாதம், வரலாற்று பொருள்முதல்வாதம், வர்க்கம், கூலியுழைப்பு, மூலதனம், சொத்துரிமை, உற்பத்தி உறவுகள், அரசு சோசலிசம், கம்யூனிசம் என பெரும்அறிவு வட்டம் அது. மார்க்ஸியத்தை ஏற்கவேண்டுமானாலும் நிராகரிக்கவேண்டுமானாலும் அந்த வட்டத்துள் சென்று வந்தாகவேண்டும். குறைந்தபட்சம் வட்டத்துள் எட்டியாவது பார்த்தாகவேண்டும். இப்படியிருக்க ரெண்டு நிமிஷத்தில் எப்படி அதை விளக்க முடியும்? ரெண்டு நிமிஷத்தில் எப்படி அதை விளங்கிக்கொள்ள முடியும்?

ஒருமுறை என்னுடைய அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தார் வெளியூரிலிருந்து வந்திருந்த சகோதரர் ஒருவர். பேசும்போது அடிக்கடி, 'நான் அம்பேத்கருடை நூல்களை படிச்சிருக்கேன் அய்யா' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கிளம்பும் போது புத்தக அலமாரியைக் கவனித்தவர் அங்கிருந்த அண்ணலின் நூல் தொகுப்புகளைக் கண்டு 'என்னது, அம்பேத்கர் புத்தகங்கள் இத்தனையா?' என்றார் அதிர்ச்சியுடன். அப்படியானால் அம்பேத்கரை வாசித்துவிட்டேன் என்று இவர் சொன்னது எதை என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். நானும் அண்ணலை முழுமையக வாசித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. சில புத்தகங்களை இன்னும் முடிக்கவில்லை. சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியிருக்கிறது.  'நம்ம அம்பேத்கர்'தான் என்று அவ்வளவு எளிதில் அவரை அனுகிவிட முடியாது. சமூகம் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் அவரை அனுகினால் குழப்பம்தான். ஆனால் உள்ளிழுத்துக்கொள்ளக்கூடிய எழுத்துக்களுக்கும் சொற்களுக்கும் சொந்தக்காரர் அண்ணல். அவரின் எழுத்துக்களிலும் சொற்களிலும் நாம் கற்கவும் சிந்திக்கவும் தூண்டும் மாபெரும் சிந்தனைவளம் இருக்கிறது. ஆனால் நாமோ சில பக்கங்களை படித்துவிட்டு 'எல்லாத்தையும் படிச்சுட்டேன்' என்று திருப்தியடைகிறோம், இந்த சகோதரர் போல.

நான் இங்கே உதாரணத்திற்காக கூறும் இவ்விரண்டு சகோதரர்களும் எதையுமே படித்திருக்கமாட்டார்கள் என்றோ நான் அவர்களை விட அதிகம் படித்திருக்கிறேன் என்றோ கூறவரவில்லை. இருவரும் நிச்சயம் படித்திருக்கிறார்கள். நான் படிக்காத புத்தகங்கள் அவர்களால் படிக்கப்பட்டிருக்கலாம். மார்க்ஸியத்தைப் பற்றிக் கேட்ட சகோதரன் வாசிப்பு பழக்கம் உள்ளவர்தான். சமூக மாற்றத்துக்கான சிந்தனையோட்டத்தில், போராட்டங்களில் பங்கெடுப்பவர்தான். அண்ணல் நூல் பற்றிக் கேட்டவரும் அப்படித்தான் இருக்கவேண்டும். அண்ணலின் தொகுப்பை காணாமல் இருந்திருக்கலாம் அவர். ஆனாலும் அண்ணலின் எழுத்தை தனி  ஒரு நூலாக படித்திருப்பார்தான். அண்ணல் பற்றிய நூல்களையும் படித்திருப்பார் என்பது அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தெரிந்தது. எனவே அவர்கள் எதுவுமே தெரியாதவர்கள் என்று கூறிவிட முடியாது. நான் இங்கே கூறவந்தது வேறொரு பிரச்சனை. பிரச்சனை என்னவென்றால் நாம் நமக்கு தெரிந்தவற்றை மட்டுமே  'அறிதலின் முழுமை' என்று நினைத்து ஒரு கட்டத்தில் கற்றலை நிறுத்திவிடுகிறோம். ஒருவருக்கு மார்க்சிய தத்துவம் தெரியவேண்டுமென்று அவசியமில்லை என்று யாரேனும் கூறலாம். ஆனால் அரசியலில் ஈடுபடும் ஒருவருக்கு அதையும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறதல்லவா. அண்ணலின் அனைத்து எழுத்துக்களையும் வாசிக்கமுடியாமல் ஒருவர் இருக்கலாம். ஆனால் அண்ணலைப் பற்றி, இந்த சமூக அவலங்களைப் பற்றி சிந்திப்பவர் அவரது நூல்களைப் பற்றியேனும் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டாமா. இதையெல்லாம் தெந்துகொள்ளமுடியும். ஆனாலும் என்ன பிரச்சனை? மார்க்ஸியத்திடமா பிரச்சனை? அண்ணலின் நூலில் பிரச்சனையா? இல்லை. பிரச்சனை நம்மிடமிருக்கிறது. 'நாம் நிறைய தெரிஞ்சுக்கிட்டோம்' என்கிற நம் மனநிலைதான் பிரச்சனை. கல்லாதது கடலளவு, கல்லாதது உலகளவு என்பவையெல்லாம் வெறும் பழமொழிகளாகிவிட்டன. உண்மையில் இவை  நம்மை புதுப்பித்துக்கொண்டிருக்கும் மொழிகள்.

வாசித்தல் நமக்கு முக்கியமான ஒன்று. வாசிப்பது நம்மை விழிக்கவைத்துக்கொண்டேயிருக்கிறது. நாம் அதை உணர்ந்தும் இருக்கிறோம். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் நின்றுவிடுகிறோம். ஒருவர் இளநிலை பட்டம் படித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் 15 ஆண்டுகள் படித்தும் எழுதியும் இருக்கிறார். ஆனால் படிப்பை முடித்துக்கொண்ட பிறகு, அவர் புத்தகங்களை படிக்கிறாரா? பெரும்பான்மையானவர்கள் படிப்பதில்லை. ஒருவரிடம் தொலை பேசி எண்ணைக் கோரும் படித்தவர் அவரிடமே எழுதுகோலைக் கொடுத்து எண்ணை எழுதிதரும்படி கூறுகிறார். 15 ஆண்டுகளாக பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் எவ்வளவோ எழுதிக்குவித்திருப்பார். ஆனால் பத்து எண்களை ஏன் எழுதவிரும்பவில்லை.  ஒரு வருடமாக இருக்கும் புகைப்பழக்கத்தை விடமுடியவில்லை என்று கூறும் நாம் எப்படி 15 ஆண்டுகளாக படித்ததையும் எழுதியதையும் மறந்துவிடுகிறோம். ஏனெனில் நம்முடைய கல்வி முறை நமக்கு படிப்பதையும் எழுதுவதையும் பழக்கப்படுத்தவில்லை. மாறாக அவற்றை  கட்டாயமாக ஆக்கியிருக்கிறது. படிப்பையும் எழுதுவதையும் கட்டுப்படுத்துவதற்கான உத்தியாக ஆக்கியிருக்கிறது. பள்ளியிலேயே இது துவங்கிவிடுகிறது. 'நாளை படித்துவிட்டு வரவில்லை என்றால் பிரம்படிதான் கிடைக்கும்' என்று படிப்பைக் காட்டி மிரட்டியிருக்கிறது நம் பள்ளிக்கூடம். எழுத்துப்பிழையாக எழுதிவிட்டால் 'பத்து தடவை எழுது' என்று எழுதுவதை தண்டனையாக ஆக்கியது நம் பள்ளிச்சூழல். பிறகெப்படி படிக்க, எழுத?

எனக்கு வாசிப்பு பழக்கம் சிறுவயதிலேயே வந்துவிட்டதில் மகிழ்ச்சியுண்டு. அதற்கு காரணம் என்னுடைய அப்பா. அவருக்கு வாசிப்பை பழக்கமாக்கியது மார்க்ஸிய இயக்கம். 1980களில் எங்கள் பெண்ணாடம் பகுதி மார்க்ஸிய தளமாக இருந்தது. சி.பி.எம்.இல் இருந்த அப்பாவுக்கு நக்ஸல்பாரிகளின் உறவு கிடைக்க அதன் வழியே வாசிப்பு பழக்கமும் பற்றிக்கொண்டது. அவர் பள்ளி காலங்களில் இரவு உணவை முடித்து சீக்கிரமே விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிடுவாராம். என்னுடைய தாத்தா 'அதுக்குள்ளேயே விளக்கணைச்சுட்டான் பாரு.படிக்கிறதில்லையா?' என்பாராம். பிறகு மார்க்ஸிய இயக்கக்காலத்தில் இவர் விடிய விடிய படித்துக்கொண்டிருக்கும் போது 'இன்னுமாடா விளக்கெரியுது.தூங்கிட்டு நாளைக்கு படியேன்' என்பாராம் தாத்தா. அப்படிப்பழக்கப்படுத்தியிருந்தது அன்றைய இயக்கம். அந்த பழக்கம் இன்னமும் அவரிடம் இருக்கிறது. இன்றைக்கும் புதிய புதிய நூல்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் இருந்த போது அன்றைய தி.மு.க.அரசு அவரை ஓராண்டுக்குமேல் சிறையில் அடைத்தது. அப்போது சிறைக்கு பார்க்கச் செல்பவர்கள் அவருக்கு நூல்களைத்தான் வாங்கிச்சென்றனர். அம்பேத்கர் பிரியன் எழுதிய 'பகுத்தறிவு பாட்டன் பண்டிதமணி அயோத்திதாசர்' என்னும் நூலை நான் கொண்டு சென்று கொடுத்தபோது, 'எனக்கு வந்துவிட்டது' என்று சொன்னர். சிறையில் அதிகாலை நேரம் வரை படித்துக்கொண்டிருந்த அவரை காவலர்கள் 'உடல் என்ன ஆகும்? படுங்கள்' என்று தினமும் கூறியிருக்கிறார்கள். அவருக்கு வாசிப்பு மட்டுமல்ல, வாசிப்பிலிருந்து குறிப்பெடுக்கும் பழக்கமும் உண்டு. சிறையில் மட்டும் அவர் எடுத்த குறிப்புகள் ஆறாயிரம் பக்கங்களுக்கு மேல். 67 வயது வந்தபிறகும் இன்னமும் வாசித்துக்கொண்டிருக்கும் அவரிடமிருந்தே எனக்கும் வாசிப்பின் மீதான தாக்கம் வந்திருக்கவேண்டும்.

எங்கள் கூரை வீட்டில் நூற்றுக்கணக்கான சோவியத் நூல்கள் இருந்தன. எங்கள் வீடுதான் அன்றைக்கு பெண்ணாடம் நக்ஸல்பாரி சென்டராக இருந்தது. அங்கு தோழர்கள் இரவு நேரங்களில் கூடி,படித்து,விவாதித்து, ராவா உப்புமா உண்டு, வீதி நாடகங்களுக்கும், புரட்சிகர பாடல்களுக்கும் ஒத்திகைப்பார்த்து அறிவை செப்பனிட்ட காலத்தில்தான் நான் வந்து பிறந்தேன். எனக்கு வீட்டில் விளையாட்டு பொருளே புத்தகம்தான். புத்தகங்களை கலைப்பதும் அடுக்குவதும்தான் விளையாட்டு. எழுத்துக்கூட்டி படிக்க கற்றுக்கொண்ட பிறகு மார்க்ஸ்,லெனின்,ஏங்கெல்ஸ் என்று புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைத்தது இன்னமும் நினைவிருக்கிறது.

வீட்டில் புழங்கும் செய்தித்தாள், பத்திரிக்கை என்று சிறுவயதிலேயே புரட்டும் பழக்கமிருந்தாலும், பலரையும் போல எனக்கும் காமிக்ஸ் கதைகளில்தான் வாசிப்பு பழக்கம் துவங்கியது.  இரும்புக்கை மாயாவிக் கதை மிகவும் பிடிக்கும். அம்மாவுடன் பெண்ணாடம் செல்லும்போதெல்லாம் காமிக்ஸ் புத்தகம் வாங்கி வருவேன். அப்பாவுடன் போகும்போது முடியாது. அவருக்கு காமிக்ஸ் கதைகள் மீது ஏனோ கோவம் இருந்தது. ஒரு கட்டத்தில் காமிக்ஸ் மீதான நாட்டம் குறைந்தது. எங்கள் கிராமத்தில் துவங்கப்பட்ட 'அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம்' அறிவு ரீதியான பேச்சுகளை உருவாக்கியது. மாலை வகுப்புகள், சீர்திருத்த திருமண உரைகள், போதாதற்கு வீட்டில் அரசியல் பேச்சுகள். இதெல்லாம் என்னை பாதித்தன என்பதை இப்போதுதான் உணர்கிறேன். அந்த பாதிப்பின் விளைவாக ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும் போது பொது அறிவின் பக்கம் வாசிப்பு திரும்பியது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு பத்திரிக்கை விளம்பரத்தைப் பார்த்து மணிமேகலை பிரசுரத்திற்கு அஞ்சல் அட்டையில் கடிதமெழுதி ஒரு புத்தகத்தை வரவழைத்தேன். இப்போது தபாலில் எனக்கு நிறைய புத்தகங்கள் வருகின்றன. தபால் நிலையத்திலும் தபால்காரர்களும் உங்களுக்கு மட்டும் இவ்வளவு புத்தகங்கள் வருகின்றனவே என்று ஆச்சர்யபடுவார்கள். தைவானிலிருந்து வரும் பௌத்தம் தொடர்பான நூல்கள் அடங்கிய பார்சலை எடுக்க சென்ற போது, வெளிநாட்டிலிருந்தும் வந்துவிட்டதா என்றார்கள். முதன் முதலில் நான் மணிமேகலை பிரசுரத்திலிருந்து வரவழைத்த அந்த நூல்தான் இதன் துவக்கம். அந்த நூலின் பெயர் 'பொது அறிவு களஞ்சியம்'. சிறு நூல்தான். எங்களுக்கான அஞ்சல் நிலையம் இறையூரில் இருக்கிறது. அதை வாங்க என்னை இறையூரைச் சார்ந்த பட்டதாரியான மாமா உக்குரு சக்தியுடன் அனுப்பினார் அப்பா. உக்குரு மாமா நிறைய படிப்பவர். விடுதலை சிறுத்தையின் இறையூர் முகாமுக்கு முக்கிய சிந்தனையாளர். அஞ்சல் நிலையத்திலேயே பார்சலை பிரித்து புத்தகத்தை புரட்டினார். 'நல்ல புக்குதான் மாப்பிள. இதுமாதிரி நிறைய படி' என்று என் கையில் கொடுத்தார். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை, என்னை பார்க்கும் போதெல்லாம் 'நிறைய படி மாப்ள' என்பார். அந்த புத்தகத்தை வகுப்பில் எங்கள் கலாவதி டீச்சர் வாசித்துக்காட்டினார். 

ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகுதான் அரசியல் நூல்களில் கவணம் திரும்பியது. சின்ன வயதில் அண்ணலின் வரலாற்று நூலை கொஞ்சம் வாசித்திருந்தாலும் பதின் பருவத்தில்தான் அண்ணலை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமானது. அதற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் தலித் அரசியல் சூழலும் முக்கிய காரணங்கள். தீவிர வாசிப்பு என்பது 2000 க்குப் பிறகுதான். தலித் அரசியலின் போக்குகள் குறித்த மறுபார்வை வரவே, தீவிரமான வாசிப்பின் பக்கம் அது தள்ளியது. மனரீதியாகவும் இருந்த சில நெருக்கடிகள் தீவிர வாசிப்பில் கொண்டுவந்து நிறுத்தியது. இதன் பிறகுதான் சிறுபத்திரிக்கைகள், நூல்களை அதிகம் தேட துவங்கினேன்.பள்ளி பருவத்திலேயே தலித் முரசு (ஆசிரியர்-பெ.சந்திரகேசன்) பரிச்சயம் ஆனாலும் புதிய கோடாங்கி எனது தேடலுக்கும் சிந்தனைக்கும் புதிய திசையைக் காட்டியது. இன்னொரு பக்கம் கவிதாச்சரண் காலச்சுவடு, புதிய காற்று, புதிய பார்வை, உயிர்மை, தீராநதி போன்ற பத்திரிக்கைகளும் வாசிப்பை விரிவாக்கின. ரவிக்குமாரின் தலித், போதி, செ.கு.தமிழரசனின் எழுச்சி போன்ற இதழ்களும் முக்கியமானவை. நண்பர்களுடன் இணைந்து கருவறை படிப்பகம் என்று ஒரு வாசகர் வட்டத்தை துவங்கினேன் பத்திரிக்கைகளும் புத்தகங்களுமே தினசரி நுகர்வு பண்டமாகின. இரவெல்லாம் படிப்பு. எல்லோரும் உறங்க செல்லும் நேரத்தில் படிக்க துவங்கி, அதிகாலை வரை வீட்டு வாசலில் படித்துக்கொண்டிருப்போம். இடையில் கருப்பு தேநீரும் சில நேரங்களில் பிஸ்கட்களும் வாசிப்போடு சுவைக்கும். அதிகாலை நேரத்தில் சப்பாத்தி சுட்டு தின்றபடியும் படிப்போம். அந்த நேரத்தில் கரும்பு வெட்டுவதற்கு போகும் சொந்தங்கள் 'எப்பதாண்டா தூங்குவீங்க?' என்று கிண்டல்பன்னிவிட்டு போவார்கள். மின்சாரக்கட்டணம் கட்டமுடியாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதும்கூட இரவில் மெழுகு வர்த்திகளை ஏற்றி வாசிப்போம். ஒரு கட்டத்தில் இந்த இரவு வாசிப்பில் அப்பாவும் எங்களுடன் கலந்துகொள்ள வாசிப்புடன் விவாதமும் கலந்துக்கட்டியது.

எங்கள் கிராமத்திலிருக்கும் பெண்ணாடம் ரயில் நிலையம் எங்களால் பகல் நேரத்தில் ஒரு வாசக சாலையாக ஆகிவிடும். செய்தித்தாள், பத்திரிக்கைகள், நூல்கள் என அங்கே வாசிக்கப்படும். ரயில் நிலைய அதிகாரிகளும் எங்களோடு வாசிப்பார்கள். அண்ணல்,மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் போன்றவர்களின் எழுத்துக்களை பயின்றுகொண்டே, ரவிக்குமார், ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கம், சிவகாமி, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், கோ.கேசவன், பிரேம்;ரமேஷ், மாலதி மைத்ரி, கவுதம சன்னா, மனுஷ்யபுத்திரன், தொ.பரமசிவம், சுந்தர ராமசாமி, அரங்க.மல்லிகா, அ.ராமசாமி, கவிதாச்சரண், வீ.அரசு போன்றவர்களின் எழுத்துக்களையும் விவாத பொருட்களாக்கினோம். இலக்கிய வாசிப்பில் இமையம், ஜே.பி.சாணக்கியா, அழகிய பெரியவன், விழி.பா.இதயவேந்தன், ஆதவன் தீட்சண்யா, சுகிர்தராணி, கண்மணி குணசேகரன், போன்றோரின் எழுத்துக்கள் ஈர்த்தன. ஜெயகாந்தன்,புதுமை பித்தன்,பிரபஞ்சன் போன்றோரையெல்லாம் இதற்குபிறகுதான் வாசித்தேன்.
ஈழம் குறித்து எனக்கு சிறுவயதிலிருந்தே புலி ஆதரவு நிலை இல்லை. அது அப்பாவின் பாதிப்பு. ஈழ அரசியலையும் சமூக சிக்கலையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அதை நோக்கி வாசிப்பை செலுத்தும் போதுதான் அ.மார்க்ஸ் தொகுத்து  அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த, 'கே.டேனியேல் கடிதங்கள்' கிடைத்தது. இலங்கை தலித்துகள் குறித்த பார்வையைக் கொடுத்த நூல் அது. சி.புஸ்பராஜாவின் 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' நூல் இயக்கங்களின் வரலாற்றில் படிந்த ரத்தக்கறையைக் காட்டியது. இப்படி என்னுடைய வாசிப்பை வலுப்படுத்திய எழுத்துக்களைப் பற்றி நிறைய இருக்கிறது சொல்வதற்கு. இன்னும் இன்னும் வாசிக்க வேண்டிய அவசியத்தைத்தான் இந்த வாசிப்பு பழக்கம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.

நான் மீண்டும் நமது முக்கிய பிரச்சனைக்கே வருகிறேன். வாசிப்பு பழக்கம் நம்மிடையே வளர்ந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. ஐ.நா.வின்  யுனெஸ்கோ 2013 அறிக்கையின்படி உலக அளவில்  நூல் வெளியீட்டில் முதலில் உள்ள நாடு சீனா. அமெரிக்காவுக்கு இரண்டாவாது இடம்தான். ஐந்தாவது நாடு இந்தியா. தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்கள் இருக்கின்றன. வருடத்திற்கு ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவருகின்றன. இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டன. புத்தக கடைக்கு அலையாமல் எங்கிருந்தும் நூலை வரவழைக்கும் வசதியும் இருக்கிறது. நூலகங்கள், ஊருக்கு ஊர் புத்தக கண்காட்சிகள் என நூல்களை நுகர நிறைய வழிகள். ஆனால் ஏன் நம்மிடம் குறைந்துவிட்டது வாசிப்பு பழக்கம். ஏன் புத்தகங்களிலிருந்து விலகியே நிற்கிறோம்.

புத்தக புழுவாக இருக்க வேண்டாம். மாதத்திற்கு ஒரு புத்தகத்தை படித்தால் கூட ஒருவர் ஆண்டுக்கு பன்னிரெண்டு புத்தகங்களை படிக்கமுடியும். ஆனால் ஆண்டுக்கு ஐந்து புத்தகங்களை படிப்பவர்கள் எத்தனை பேர். எத்தனை பேர்களின் வரவு செலவுக் கணக்கில் புத்தகச் செலவு இடம்பிடிக்கிறது. நூல்களின் விலையேற்றமும் முக்கியமானதுதான் என்கிறார்கள் சிலர். இருக்கலாம். ஆனால் அதுமட்டுமே காரணமல்ல. நம் செலவுகளை ஆராய்ந்தால் அதில் வீண் செலவுகளை புத்தகம் பக்கம் திருப்பிவிட வழிக்கிடைக்கும். விஷயம் அதுவல்ல. புத்தகத்தின் அவசியத்தை நாம் சரியாக உணரவில்லை. அதை உணர்ந்தவர்கள்தான் வரலாற்றில் இருக்கிறார்கள்;வரலாற்றை படைத்திருக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கருக்கு இருந்த புத்தக உறவை நாம் அறிவோம். ஒரு முறை அவர் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்போது அவர் வருவதாக இருந்த கப்பல் கவிழ்ந்துவிட்டது.  குடும்பத்தினர் எல்லோரும் பதறிவிட்டனர். ஆனால் அண்ணல் அந்தக் கப்பலில் வராமால் வேறொரு கப்பலில் வந்து எல்லோருக்கும் நிம்மதியைக் கொடுத்தார். எல்லோரும் நிம்மதி அடைந்தாலும் அவரோ, கவிழ்ந்த அந்த கப்பலை நினைத்து கடுமையாக வருந்தினார். ஏனெனில் அந்தக் கப்பலில் அண்ணல் தன்னுடைய புத்தகங்களை அனுப்பியிருந்தார். அமெரிக்காவில் படிக்கும் போதும் சரி, இலண்டனில் படிக்கும் போதும் சரி அவர் ஏராளமான நூல்களை வாசித்தார். தன்னுடைய வீட்டில் சுமார் முப்பதாயிரம் நூல்களை வைத்திருந்தார். பல அரிய நூல்கள் அவரிடமிருந்தன. ஆங்கிலேயர்கள் கூட சில குறிப்புகளை எடுக்க அண்ணலின் வீட்டு நூலகத்துக்கு வந்து போனதுண்டு. இந்தியாவில் அவர்காலத்திலிருந்த வேறெந்த தலைவரும் அவரளவிற்கு புத்தகங்களை வாசித்தவர்கள் யாருமில்லை. ஒரு ஆங்கிலேய அதிகாரி அண்ணலை 'நீங்கள் இருநூறு பட்டதாரிகளுக்கு சமம்' என்றார். அதுவெறும் புகழ்ச்சியல்ல. அண்ணலின் அறிவுக்கு உரிய அங்கீகாரம். அந்த அறிவைக் கொடுத்தது அவர் பிறந்த சமூகமும் புத்தகங்களும்தான். அதனால்தான் அவர் இறுதிவரைக்கும் புத்தகங்களோடே வாழ்ந்தார். 1956 டிசம்பர் 5 ஆம்தேதி இரவு தன்னுடைய உதவியாளர் ராட்டுவை அழைத்து, அச்சாக இருந்த சில புத்தகங்களை சரிபார்க்கவேண்டுமென்று எடுத்து வரச்சொன்னார். எடுத்து வந்து அண்ணலின் மேசை மீது வைத்துவிட்டு சென்றார் ராட்டு. அன்று இரவுதான் அண்ணல் தூக்கத்திலேயே மரணமடைந்தார். இறுதிவரை ஏன் அண்ணல் புத்தகத்தின் மீது கவனம் செலுத்தினார்? ஏனெனில் அவர் இறுதி வரை கற்பதை தொடர்ந்தார்.

அண்ணல் மட்டுமல்ல யாரெல்லாம் சமூக மாற்றத்தை நேசித்தார்களோ அவர்களெல்லோருமே போதுமென்று கற்பதை நிறுத்தியதில்லை. ஏழ்மையை, சுரண்டலை ஆய்வுக்குட்படுத்திய மார்க்ஸ் இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்களை எழுதித்தள்ளினார் என்றால் அதற்கு அவர் கற்றது கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ வறுமைச் சூழலைக் கடந்து வந்த மார்க்ஸுக்கும் அண்ணலுக்கும் புத்தக வாசிப்பு மட்டுமே சோலையாக இருந்தது. இலண்டன் நூலகத்தை அதிகம் பயன்படுத்தியவர்கள் இவ்விருவரும்தான் என்று கூறப்படுவதற்கு பின்னால் இருப்பது மார்க்ஸ், அண்ணலின் பிம்பங்கள் மட்டுமல்ல, அவர்களின் சமூக நோக்கமும் இருக்கிறது. ஏன் இவர்கள் மற்றவர்களை விட அதிகம் படித்தார்கள். இளமையிலேயே இருவரும் பெரும் ஞானத்தை பெற்றுவிட்டார்கள். ஆனாலும் ஏன் இறுதிவரை படித்தார்கள். மற்றெதையும்விட ஏன் புத்தகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் இருவருமே தங்களின் எதிர் முகாம்களைக் குறித்து தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார்கள். தங்களது எதிர் முகாம்கள் அவ்வளவு எளிதில் வீழ்த்தக்கூடிய சக்தியல்ல. அவை, காலத்துக்கு,இடத்திற்கு, சூழலுக்கு ஏற்றவாறு தம்மை நிறுவிக்கொண்டு அதிகாரத்தை செலுத்திக்கொண்டுதானிருக்கும். எனவே அவற்றை வீழ்த்த பலமான சிந்தனை வேண்டும். ஆதலால் விரிவான, ஆழமான கற்றல் அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்களிருவரும் வேறுபடும் இடங்களையே நாம் பேசி வருகிறோம். அவர்கள் இருவரும் ஒன்றுபடும் இடம் இதுதான். உன் எதிரி பலமானவன் எனில் உன் அறிவை பலமாக்கு. இதைத்தான் அவர்களின் வாசிப்பு நமக்கு காட்டுகிறது.

நாமெல்லாம் அண்ணலைப் போலவோ மார்க்ஸ் போலவோ படிக்கமுடியுமா என்று நமக்கு கேள்வி எழும். ஆனால் அண்ணலின் மார்க்ஸின் கனவுகளை நிரவேற்றும் கடமை நமக்கிருக்கிறதா இல்லையா? ஆம் எனில் நம்முடைய அறிவு எவ்வளவு பலமிக்கதாக இருக்க வேண்டும். எவ்வளவு படிக்கவேண்டியிருக்கிறது. இதை உணர்ந்தாலே போதும். நம்முள் இருக்கும் சமூக விடுதலைக்கான ஓர் அற்புதமான வாசகர் வெளியே வந்துவிடுவார்

































Wednesday, April 13, 2016

இது என்னுடைய புதிய வலைப்பக்கம். அண்ணலின் பிறந்த நாளில் துவக்குகிறேன். கலை-இலக்கியம்-அரசியல்-அறிவியல் உள்ளிட்ட பார்வைகளை, விவாதங்களை, நிகழ்வுகளை பதிவிடவே இப்பக்கம்.

சேரிகளில் பொதுவிடமாக இருப்பது மாரியாக்கோயில்கள்தான். ஒவ்வொரு சேரியிலும் மாரியம்மன் கோவிலைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் மக்களை காணலாம்.குடும்பம், துக்கம்,சந்தோஷம், கோபம்,அரசியல்,சமூகம்,சினிமா என பலதரப்பட்ட பேச்சுக்களால் சூழப்பட்டிருக்கின்றன சேரிகளின் மாரியாக்கோயில் எனப்படும் மாரியம்மன் கோவில்கள். அதனை மனதில் வைத்தே இப்பக்கத்திற்கு மாரியாக்கோயில் எனப் பெயர்சூட்டியுள்ளேன்.

------------------------------------------------------------------------------தி.ஸ்டாலின்.